Vitamin-A-24316சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 6 மாதம் முதல் 60 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு நேற்று முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மார்ச், செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு குழந்தைகளின் உடல்நலனுக்காக வைட்டமின் ஏ திரவம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டு வரும் 26ஆம் தேதி வரை திரவ மருந்து வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், குடும்ப நலத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து நகர நலவாழ்வு மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்கள் ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த திரவத்தை தேவைப்படுவோர் பெற்றுக் கொள்ளலாம். இந்த முகாமில் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவத்தை அளிக்க பெற்றோர் முன் வர வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளின் மூளை, உடல் வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச் சத்துமிக்க திரவம் வைட்டமின் ஏ திரவமாகும். மாலைக் கண் நோய் வராமல் தடுக்க உதவும் இந்தத் திரவம், குழந்தைகளின் கல்லீரலில் சென்று நான்கு மாதங்கள் தங்கியிருந்து, அதன் பின்னர் இரு மாதங்களில் கரைந்துவிடும்’என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

English Summary: Vitamin A deficiency Camp in Chennai on 26th March.