கரூர் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் நிலவுவதாலும் வரும் நாட்களில் மேலும் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதாலும் பொதுமக்கள் தங்களை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அன்றாட தட்ப வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். எடை குறைவான, இறுக்கமில்லாத, கதர் ஆடைகளை அணிவது, கண்களுக்கு கூலிங் கிளாஸ் அணிவது நல்லது. வெயிலில் செல்லும் போது குடை மற்றும் காலணிகளைப் பயன்படுத்த வேண்டும். வெளியில் பயணம் செல்லும் போது கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்லவேண்டும். வெயிலில் வேலை செய்பவர்கள் தலைக்குத் தொப்பி, குடை மற்றும் ஈரத்துணியை தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பாகங்களில் அணிந்து வேலை செய்தல் வேண்டும்.

உப்புக்கரைசல் நீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர் ஆகாரம், எலுமிச்சை ஜூஸ், லெஸி மற்றும் மோர் ஆகியவை உடம்பில் உள்ள நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதால் இதனை அதிகமாக உட்கொள்ள வேண்டும். மின் விசிறி மற்றும் ஈரத் துணிகளைப் பயன்படுத்துதல் வேண்டும் மற்றும் அடிக்கடி குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். பணிபுரியும் இடத்தின் அருகே போதிய அளவு குடிநீர் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். தொழிலாளர்கள் நேரடி சூரிய ஒளியில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். செய்ய கூடாதவைகள்: பொதுவாக வெயிலில் செல்வதையும், குறிப்பாக நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை செல்வதையும் தவிர்க்கவும். அடர்த்தியான நிற உடைகள் மற்றும் இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் கடுமையான வேலைகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். டீ, காபி அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. இது உடம்பில் உள்ள நீர்ச்சத்தைக் குறைக்கும். புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *