சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் வசதிக்காக வைஃபை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில்
நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வண்ணாரப்பேட்டை-ஏ.ஜி. டி.எம்.எஸ். இடையே புதிய வழித்தடத்தில் கடந்த 10-ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து, 45 கி.மீ. தூரத்துக்கான சென்னை மெட்ரோ முதல் கட்ட ரயில் திட்டம் முழுமையடைந்தது.

வண்ணாரப்பேட்டை-விமானநிலையம் வரையிலான முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரையிலான இரண்டாம் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் கட்ட சேவை முழுமையடைந்த பிறகு, மெட்ரோ ரயில்களில் தற்போது தினசரி 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மெட்ரோ ரயிலில் வைஃபை வசதியும், ரயில் செல்லும் வழித்தடத்தைக் காட்சிப்படுத்த டிஜிட்டல் வரைபடமும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *