உலகிலேயே அதிவேக பப்ளிக் வை-ஃபை வசதியை இந்தியா முழுவதும் உள்ள 400 முக்கிய ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். இந்த வசதி வரும் 2017ஆம் ஆண்டிற்குள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இலவச வை-ஃபை வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியது. இந்த வசதி தற்போது பொதுமக்களால் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து இந்தியாவின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் இந்த வசதியை செய்து தர வேண்டும் என்று ரயில்வே துறைக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடப்பட்டது. இதனையடுத்து அடுத்தாண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் உள்ள 400 முக்கிய ரயில் நிலையங்களில் உலகிலேயே அதிவேக பப்ளிக் வை-ஃபை வசதியை அறிமுகம் செய்யப் போவதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தெரிவித்துள்ளார்.

இதற்காக கூகுள் மட்டுமின்றி மற்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் மத்திய அரசு இணைந்து செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, விசாகபட்டினம், புவனேஷ்வர் ஆகிய ரயில் நிலையங்களில் உலக தரத்தில் வை-ஃபை வசதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Worlds fastest public wifi connection in 400 Railway station. Central minister Suresh Babu announced.