சென்னையில் நேற்று மாலை முதல் மழை பெய்து வரும் நிலையில், இதேநிலை இன்று மாலை வரும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை தொடர்ந்து மழை பெய்தது. வேளச்சேரி, கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் சென்னை முழுவதும் குளிர்ச்சி நிலவுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நெற்பயிர் அறுவடைக்கு 20 நாட்கள் உள்ள நிலையில், இந்த மழை போதுமானதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர். திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிலையில் மழை தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் முல்லைப் பெரியாறு அணை 141 அடியை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பெய்து வரும் கனமழை கேரளாவில் தொடரும் என்றும், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் குறிப்பிட்ட இடங்களில் பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று மிதமான மழை பெய்துள்ளதாக கூறியுள்ள அவர், இன்று மாலை வரை சென்னையில் தூரல் நிலை காணப்படும் என்று கூறியுள்ளார். சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *