சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் 1.5 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து நேற்று முன் தினம் சென்னை வந்த விமானம், அடுத்த சில மணி நேரங்களில் மும்பைக்கு புறப்பட இருந்தது. இந்நிலையில் இந்த விமானத்தின் கழிவறையை சுத்தம் செய்ய சென்ற துப்புரவு தொழிலாளிகள் கழிவறையில் மர்ம பார்சல் ஒன்று இருப்பதாக கொடுத்த தகவலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து சோதனை செய்த விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் அந்த பார்சலில் 1.5 கிலோ தங்கக்கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த தங்கத்தை மீண்டும் மும்பைக்கு கடத்த திட்டமிட்டு பயணி ஒருவர் கழிவறையில் மறைத்து வைத்திருக்கலாம் என சந்தேகப்படும் சுங்க இலாகா அதிகாரிகள், இந்த விமானத்தில் மும்பைக்கு பயணம் செய்ய டிக்கெட் எடுத்தவர்களில் சந்தேகத்திற்கு இடமானவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

English Summary : Chennai Airport customs officials found 1.5 kg of gold in toilet of Chennai – Singapore flight.