‘ஐ’ படத்தை அடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த ’10 எண்றதுக்குள்ள’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ராஜஸ்தானில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பினை முடித்துவிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பிய படக்குழுவினர் கடைசி கட்ட படப்பிடிப்பை கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் நடத்தினர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்ததாக இயக்குனர் விஜய் மில்டன் அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்துள்ளார்.

’10 எண்றதுக்குள்ள’ படப்பிடிப்பு நிறைவு பெற்றதை இந்த படத்தின் நாயகி சமந்தாவும் தனது டுவிட்டர் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். சமந்தா நேற்று தனது டுவிட்டரில் கூறியபோது, ’10 என்றதுக்குள்ள’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்தது. இந்த படத்தின் படக்குழுவினர்களை விட்டு பிரியும்போது எனக்கு மிகவும் உணர்ச்சிமயமாக இருந்தது. இந்த டீமுடன் பணி புரிந்தது எனக்கு பல நல்ல அனுபவங்களை கொடுத்தது. இந்த படத்தை நான் மிகவும் எதிர்பார்க்கின்றேன்’ என கூறியுள்ளார். மேலும் படக்குழுவினர் அனைவருடனும் விக்ரம் மற்றும் சமந்தா இணைந்து செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டு அந்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 21 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை அடுத்து படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும் என இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார். விக்ரம், சமந்தா, பசுபதி, ஜாக்கி ஷெரா, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடிகை சார்மி ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டி.இமான் மற்றும் அனூப் ஆகியோர் இசையமைத்துள்ள நிலையில் இந்த படத்தை ‘கோலிசோடா’ பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கியுள்ளார்., இந்த படத்தை சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளார்.

English Summary : Samantha tweets as “10 enradhukulla” shooting finished, and shared her feelings about the team.