சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட 8,394 விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் ஆகியவை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் அவர்களின் தலைமையில் அகற்றப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்த்ரவல்லி செய்தி குறிப்பு ஒன்றில் கூறியதாவது: சென்னையில் முறையாக அனுமதி பெறாமலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், மாநகர போக்குவரத்துக் காவல் துறை இணை ஆணையர் ஆகியோர்களை கொண்ட சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டதாகவும், இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக சென்னை மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வட்ட அளவில் கண்காணிக்க வட்டாட்சியர், மாநகராட்சி செயற்பொறியாளர், காவல் துறை ஆய்வாளர் உள்ளிட்டோர் நடவடிக்கை மேற்கொள்வர்.

இதன்படி, சென்னையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட 741 விளம்பரப் பலகைகளும், 7,653 டிஜிட்டல் பேனர்களும் அகற்றப்பட்டுள்ளன என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary : Under District Commissioner Vikram Kapoor’s order, unauthorized banners and posters has been removed throughout Chennai.