தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது நாளை (மே 10) புயலாக வலுப்பெற்று, வங்கதேசம் நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுபகுதி நேற்று (மே 8) காலை உருவானது. இது இன்று (மே 9) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

இது வடக்கு மற்றும் வடமேற்குதிசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்வரும் 11-ம் தேதி நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் திரும்பி, வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

வடதமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 10, 11, 12-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் நிகோபார்தீவுகள் மற்றும் அவற்றையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 12-ம் தேதி வரைமணிக்கு 100 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *