தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தத்துக்காக இதுவரை 36,142 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறும். தற்போது காலாண்டுக்கு ஒருமுறை பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், கடந்த அக்.27-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வழக்கமான திருத்தப் பணிகள் அன்றே தொடங்கின. அன்று முதல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும், நேரில் படிவங்கள் அளித்தும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. 2024 ஜன.1-ம் தேதி 18 வயது முடியும் வாக்காளர்கள் பெயர் சேர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பலரும் ஆன்லைன் மற்றும் நேரில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கி ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில் அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:

கடந்த ஒரு வாரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக 36,142 விண்ணப்பங்கள் வந்துள்ளன. மக்கள் அதிக ஆர்வம் காட்டுவது இதன்மூலம் தெரிகிறது. குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் நிறைய பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், நவ.4, 5 (இன்று, நாளை) ஆகிய 2 நாட்களும் தமிழகம் முழுவதும் 31 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் செய்தலுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

அங்கு வாக்காளர் பட்டியலும் வைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் தங்கள் பெயர் அதில் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். ஒருவேளை, பெயர் நீக்கப்பட்டிருந்தால், சேர்ப்பதற்கு விண்ணப்பம் அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *