sarath-kumar-20102015தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக இருந்த சரத்குமார் மற்றும் ராதாரவியை விஷாலும் அவருடன் இணைந்து ஒருசில நடிகர்களும் முதன்முதலில் எதிர்க்க முக்கிய காரணம், நடிகர் சங்கம் எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தம்தான். இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என விஷால் தரப்பு கூற அதற்கு சரத்குமார் தரப்பு மறுத்ததால்தான் இரு அணிகளாக பிரிவு ஏற்பட்டது. இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பாண்டவர் அணியினர் செய்யும் முதல் வேலை எஸ்.பி.ஐ நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வது என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அனைவருக்கு அதிர்ச்சி தரும் வகையில் இந்த ஒப்பந்தம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டதாக சரத்குமார் நேற்று சென்னையில் ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சரத்குமார் மேலும் கூறியதாவது: “நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளாக நடிகர் சங்கத்தில் பணியாற்றி இருக்கிறேன். அந்த காலத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளேன். தற்போதும் நடிகர் சங்க பணிகளுக்கு என்னை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், சமீபத்தில் என் மீது கூறப்பட்ட முறைகேடு புகார்கள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் ஏற்கனவே பதிலளித்திருக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுகள், முறைகேடு புகார்கள் உண்மையில்லை.

நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தை நாங்கள் விற்க நினைக்கவில்லை. எஸ்.பி.ஐ. சினிமாஸ் உடன் ஒப்பந்தம் போட்டதுதான் தற்போது தேர்தல் நடக்க காரணம். ஆனால், அந்த ஒப்பந்தம் சிறந்தது என்று இப்போதும் நான் நினைக்கிறேன்.

ஆனால், அந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக தொடர்ச்சியாக வந்த விமர்சனங்களால், கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதியே எஸ்.பி.ஐ. சினிமாஸ் உடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளோம். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அதை அறிவிக்கலாம் என இருந்தேன். ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை நடிகர் சங்க தலைவர் நாசரிடம் வழங்குவேன்”

மேலும் என் வாழ்க்கையில் நான் பல வெற்றி தோல்விகளை பார்த்துவிட்டேன். ஆகையால் இந்த தோல்வி என்னை பாதிக்காது. சங்க உறுப்பினராக தொடர்ந்து செயல்படுவேன். எனக்கு கெளரவ பதவி எதுவும் வழங்கினால் அதை கண்டிப்பாக நான் ஏற்க மாட்டேன். ஒரு சங்க உறுப்பினராக என்னை எப்போது அழைத்து பேசினாலும் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன். உங்களுடன் தொடர்ந்து நான் பயணிக்க தயாராக உள்ளேன். தேவைப்பட்டால் என்னை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். என்று சரத்குமார் கூறியுள்ளார்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.
English summary-Sarath kumar informs that Agreement cancelled with SBI.