கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியிடம் உள்பட ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பிப்பதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. புதன்கிழமையுடன் (நவ. 28) தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புயல் பாதிப்பு காரணமாக விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், வரைவாளர் மூன்றாம் நிலை ஆகிய காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த புதன்கிழமை கடைசி நாளாகவும், தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை அலுவலர் உதவி இயக்குநர் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க நவம்பர் 21-ஆம் தேதியும், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நிலை எண் 3 மற்றும் 4 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 3-ஆம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கஜா புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் நலன்கள் கருத்தில் கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஐந்து பதவிகளிலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 10 ஆகும். தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்த டிசம்பர் 12-ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிக்கப்பட்ட போதிலும், தேர்வுகள் நடைபெறும் நாள்களில் மாற்றம் ஏதுமில்லை என்று டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *