metro_start
சென்னை நகரில் அமைந்துள்ள சுற்றுலா பகுதிகளை பார்வையிட தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சென்னை நகரில் பல சுற்றுலா பகுதிகள் சிறப்பாக விளங்கி வரும் நிலையில் தற்போது சமீபத்தில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலும் இந்த பகுதிகளில் ஒன்றாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை நகரின் புதிய அடையாளமான மெட்ரோ ரெயில் சேவை கடந்த மாதம் 29-ந்தேதி கோயம்பேடு-ஆலந்தூர் இடையே தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை மக்களின் அத்தியாவசிய பயணத்திற்கு மட்டுமே பயன்பட்ட இந்த மெட்ரோ ரயில், தற்போது சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

‘குளுகுளு’ வசதி, சென்னை நகரின் அழகை ரசித்தப்படி விரைவான பயணம் போன்ற காரணங்களால் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மெட்ரோ ரெயில் சேவை தொடங்கிய பின்னர் முதல் விடுமுறை நாளான கடந்த 5-ந்தேதி, அதில், பயணம் செய்வதற்கான கூட்டம் அலைமோதியது. ரெயில் நிலையங்களில் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்தநிலையில் 2-வது விடுமுறை நாளான நேற்று முன் தினம்  கடந்த வாரத்தை காட்டிலும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே  காணப்பட்டது.

முதல்முறையாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தவர்கள் பலரும் தங்கள் செல்போன் மூலம் ‘செல்பி’ படம் பிடித்து மகிழ்ந்தனர்.

English Summary:Changing tourist destination in Chennai Metro Rail