சென்னையில் அவ்வப்போது கைத்தறி ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி நடத்தப்படுவதுண்டு. இந்த கண்காட்சிக்கு சென்னை மக்கள் அமோக ஆதரவு தரப்பட்டு வருவதை பார்த்து வருகின்றோம். இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் “காட்டன் பேப்-2015′ எனும் கைத்தறிக் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த கண்காட்சி வரும் 25ஆம் தேதி வரை காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இந்தக் கண்காட்சியில் இந்தியாவின் 15 மாநிலங்களைச் சேர்ந்த, 125 கைவினைக் கலைஞர்கள் தாங்கள் தயாரித்துள்ள கைத்தறி ஆடைகள், கைவினைப் பொருள்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.

லக்னோவில் இருந்து சுடிதார், சேலைகள், குர்தா பைஜாமா, குஜராத்தில் இருந்து எத்னிக் பிரின்ட் குர்தீஸ், ராஜஸ்தானில் இருந்து பந்தேஜ் சூட்ஸ், மேலாடைகள், பஞ்சாபில் இருந்து பாட்டியாலா, புல்காரி ரகங்கள், உத்தரப்பிரதேசத்திலிருந்து சில்க், காட்டன் சேலைகள் ஆகியவை பெருமளவு இந்த கண்காட்சியில் குவிந்துள்ளது.

மேலும் மதுரையில் இருந்து காட்டன் சேலைகள், பர்தா, படுக்கை விரிப்புகள், ஆகியவைகளும் இந்த கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆடைகள் மட்டுமின்றி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்துள்ள மெட்டல் நகைகள், தில்லி பேன்சி ரக நகைகள், வீடுகளை அலங்கரிக்கும் கலைப் பொருள்களும் பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

English Summary: Cotton Fab 2015 Exhibition in Chennai Valluvar Kottam.