Engeyum Eppothum Director Saravanan at Screen Moon Awards Stills
ஜெய், அஞ்சலி நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமான இயக்குனர் சரவணன் அதன் பின்னர் விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி, ஜெய், ஆண்ட்ரியா நடித்த ‘வலியவன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது அடுத்து கன்னட படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் நேற்று சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இயக்குனர் சரவணன் தனது உதவியாளரும் மைத்துனருமான கெளதமுடன் நேற்று சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான நாமக்கல்லுக்கு சென்றார். அங்கு உறவினர்களை சந்தித்துவிட்டு மீண்டும் துறையூர், பெரம்பலூர், தொழுதூர் வழியாக சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வி.களத்தூர் பிரிவு பாதையில் அவருடைய கார் வந்து கொண்டிருந்தபோது, திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இயக்குனர் சரவணன் மற்றும் அவரது மைத்துனர் கௌதம் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களுக்கு வேறு எந்த ஆபத்தும் இல்லை என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களிடம் உதவியாளராக இருந்த இயக்குனர் சரவணன் தனது முதல் படமான ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்காக சிறந்த புதுமுக இயக்குனர் என்ற எடிசன் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சரவணன் பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் 25வது படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

English Summary : Engeyum Eppodhum fame director Saravanan, who was injured in a car accident today has been admitted in hospital.