சென்னையில் முழுக்க முழுக்க பெண் ஊழியர்களால் நடத்தப்படும் அஞ்சல் நிலையம் ஒன்று மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் சமீபத்தில் திறக்கப்பட்டது.

ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகம் இயங்கி வரும் சென்னையை அடுத்த மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் புதிய அஞ்சல் நிலையம் தேவை என்று அங்கிருந்த தொழிற்சாலை அதிபர்கள் மற்றும் ஊழியர்களின் வேண்டுகோளை அடுத்து அந்த பகுதியில் கடந்த திங்கள் அன்று 603004 என்னும் புதிய அஞ்சல் குறியீட்டு எண் கொண்ட அஞ்சலகம் ஒன்று தொடங்கப்பட்டது.

இந்த அஞ்சல் நிலையத்தில் முழுக்க முழுக்க பெண் ஊழியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மண்டலத்தில் முழுவதும் பெண்களை மட்டுமே கொண்டு செயல்படும் முதல் அஞ்சலகம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 4 பெண்களை கொண்ட இந்த அஞ்சல் நிலையத்தில் அஞ்சலகப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவதாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.

ஏற்கனவே சென்னை எத்திராஜ் சாலையில் பெண்களை மட்டுமே கொண்ட அஞ்சலகம் செயல்பட்டு வந்தபோதிலும், அங்கு கடித விநியோக சேவைகள் கிடையாது, மற்ற பொது அலுவல் பணிகள் (counter works) மட்டுமே நடைபெற்று வருகின்றன. எனவே சென்னை மண்டலத்தில் முழுவதும் பெண்களை மட்டும் கொண்டு செயல்படும் முதல் அஞ்சலகம் மகேந்திரா சிட்டியில் திறக்கப்பட்ட அஞ்சல் நிலையம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: First Post Office is opened for Women. All staffs are only Women.