டெல்லி: ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலானது முதல் மறைமுக வரிகளின் தாக்கம் குறைந்து விட்டது. இதன் காரணமாக மின்சாதனப் பொருட்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதாவது பொதுமக்களுக்கு மிகப் பெரிய பலனைக் கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர்தான் அதிக லாபத்தை சந்தித்துள்ளனர்.

மத்திய அரசு உஜாலா திட்டத்தின் மூலமாக மிகவும் குறைந்த விலைக்கு எல்இடி பல்புகள் மற்றும் மின்சாதனப் பொருட்களை வழங்கி வருகிறது. இதன் விலை குறைய ஜிஎஸ்டி வரி அமலானதே முக்கியக் காரணம்.

முன்பு 9 வாட் எல்இடி பல்பு விலை ரூ. 310 ஆக இருந்தது. தற்போது இது ரூ. 70 ஆக அடியோடு குறைந்துள்ளது. அதேபோல 20 வாட் பல்பு விலை ரூ. 220 ஆக குறைந்துள்ளது. மேலும் 5 ஸ்டார் விலை கொண்ட மின்விசிறிகளின் விலை ரூ. 1200 மட்டுமே. மின் சாதனப் பொருட்களுக்கு இந்த விலையைத் தவிர கூடுதலாக பணம் தர வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுதும் ஏழரை கோடி வீடுகள் உஜாலா திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி கணக்குப்படி மொத்தம் 31 கோடியே 3 லட்சத்து 69 ஆயிரத்து 218 எல்இடி பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

நரேந்திர மோடி அரசு 2015ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி உஜாலா திட்டம் தொடங்கி வைத்தது. மொத்தம் 77 கோடி பழைய குண்டு பல்புகளை அகற்றி விட்டு சக்தி வாய்ந்த எல்இடி பல்புகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே அரசின் இலக்காகும். இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 3244 கோடி கிலோவாட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்டுதோறும் நுகர்வோருக்கும் 12, 963 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் குறைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *