அண்ணா பபல்கலைக்கழக ஆட்சிக் குழு புதன்கிழமை கூடியது. இதில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அரியர் நடைமுறையை அறிமுகம் செய்யும் முடிவுக்கு ஆட்சிக் குழு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அரியர் நடைமுறையை அறிமுகம் செய்வதற்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழு அனுமதியளித்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா தெரிவித்துள்ளார்.

புதிய கல்வித் திட்டம் : தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு 2017-ஆம் ஆண்டு புதிய கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதோடு, விருப்பப் பாடத் தேர்வு முறையும் (சிபிசிஎஸ்) அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலம், மாணவர்கள் துணைப் பாடங்களில் தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்க முடியும். தங்களது துறை சாராத, வேறு துறை பாடம் ஒன்றை எடுத்தும் படிக்க முடியும்.

அரியர் முறை ரத்து : மேலும், இந்த புதிய கல்வித் திட்டத்தின்படி, அரியர் முறை ரத்து செய்யப்பட்டது. அதாவது ஒரு பருவத் தேர்வில் பாடங்களில் தோல்வியடையும் மாணவர், அடுத்து வரும் தேர்வில் அவர் தோல்வியடைந்த பாடத்துக்கான தேர்வை எழுத முடியாது. மீண்டும் அந்தப் பாடத்துக்கான தேர்வு எந்தப் பருவத்தில் வருகிறதோ அப்போதுதான் எழுத முடியும். அவ்வாறு எழுதும்போது அக மதிப்பீடு (இன்டர்னல்), புற மதிப்பீடு (எக்ஸ்டர்னல்) இரு தேர்வுகளையும் எழுதுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

மாணவர்கள் போராட்டம்: இந்தப் புதிய நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு 2017 கல்வித் திட்ட நடைமுறைகளைக் கைவிடவேண்டும் என வழியுறுத்தினர்.

அப்போது, மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய பல்கலைக் கழகப் பதிவாளர் குமார் தலைமையிலான பேராசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக குழு ஒன்று அமைத்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு : இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தின் 2017 கல்வித் திட்ட நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கிடுக்குப்பிடியில் பல்கலை : நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பல்கலைக்கழக கல்வித் திட்டத்திலோ அல்லது தேர்வு நடைமுறையிலோ அண்ணா பல்கலைக்கழகம் தன்னிச்சையாக மாற்றம் கொண்டுவரவில்லை எனவும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அறிவுறுத்தல்களின் படியே பொறியியல் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆட்சிக் குழு கூட்டத்தில் ஒப்புதல் : இந்நிலையில், பல்கலைக்கழக கல்விக் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அரியர் நடைமுறையைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இம்முறைக்கு பல்கலைக் கழகத்தில் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறும் ஆட்சிக் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட உடன், இந்த புதிய நடைமுறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அறிவித்திருந்தார்.

அனுமதி பெற்ற அரியர் தேர்வு: அதன்படி, பல்கலைக்கழக ஆட்சிக் குழு புதன்கிழமை கூடியது. இதில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அரியர் நடைமுறையை அறிமுகம் செய்யும் முடிவுக்கு ஆட்சிக் குழு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறியது:- “ஏற்கெனவே கல்விக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. எனவே, பொறியியல் மாணவர்கள் இனி வரும் காலங்களில் அரியர் தேர்வு எழுத காத்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் ஒரு பருவத் தேர்வில் வைக்கும் அரியர் தாள்களை, அடுத்து வரும் பருவத் தேர்விலேயே எழுதலாம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *