ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, மாநகரப் போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கால அட்டவணையின் படி, நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தை நிறுத்தி பயணிகளைப் பாதுகாப்பாக ஏற்றவும், இறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட சரியான பயண கட்டணங்களை பயணிகளிடம் உரிய பயண சீட்டு அளித்து வசூலிக்க வேண்டும் என்றும், பேருந்துகளில் உள்ள பழுதுகளை முறையாக சரி செய்து வழித்தடத்தில் கால அட்டவணையின் படி பேருந்துகளை முறையாக இயக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பேருந்தினை மிக கவனத்துடன் சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் இயக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி இயக்குவதன் மூலம் பயண சீட்டு வருவாய் மற்றும் இதர வருவாய் என பெருக்கிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *