cellphoneஐபோன், ஆண்ட்ராய் போன் என நவீன ரக செல்போன்கள் தற்போது பெருவாரியான மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதால், செல்போன் இணையதளம் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் செல்போனில் இணையதள சேவையைப் பெறவும், துண்டிக்கவும் போதுமான வசதிகள் நுகர்வோருக்கு இல்லாத நிலை இதுவரை இருந்தது. ஆனால் தற்போது இதற்கு புதிய வசதியை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை தொலைபேசி நிலைய நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது: கூடுதல் வருவாய் பெறும் நோக்கத்தில், செல்போன் இணையதள சேவையை “டிஆக்டிவேட்’ (துண்டித்தல்) செய்யும் நடைமுறையை, செல்போன் சேவை நிறுவனங்கள் சிக்கலானதாக வைத்திருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆகஸ்ட் 7-ஆம் தேதியன்று புதிய உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, சந்தாதாரர்கள், தங்கள் செல்போன்களில் இணையதள சேவையை ஆக்டிவேட் செய்யவோ அல்லது டிஆக்டிவேட் செய்யவோ, “1925′ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவோ தகவல் தெரிவித்தால் போதும்.

இந்த வசதியானது, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்புவதாக இருந்தால், இணையதள சேவையை “ஆக்டிவேட்’ செய்வதற்கு “ஸ்டார்ட்’ என்றும், “டிஆக்டிவேட்’ செய்வதற்கு “ஸ்டாப்’ என்றும் “டைப்’ செய்து அனுப்ப வேண்டும். அதற்கு சேவை நிறுவனங்கள் உடனடியாக பதில் அளிக்க வேண்டும். மேலும், இணையதள சேவையின் பயன்பாட்டு கால அளவு முடிவடைந்தது தெரியாமல் உபயோகிக்கும் சந்தாதாரர்களிடம் செல்லிடப்பேசி சேவை நிறுவனங்கள், கணிசமாகப் பணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, பயன்பாட்டு காலத்துக்கு மேல் உபயோகிப்பவர்களிடம், அவர்களின் சம்மதத்தைப் பெறாமல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அதேபோல, இணையதள “டேட்டா கார்டின்’ பயன்பாட்டு காலம் முடிவடைவது குறித்தும் சந்தாதாரர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு “டிராய்’ உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary:Internet Service For Cellphone to get, disconnect new Features since Sep-1.