ஜெயா டிவி கடந்த 23 ஆண்டுகளாக ‘மார்கழி உத்சவம்’ என்ற கர்நாடக சங்கீத விழாவை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு பொருளை (theme) மய்யமாக கொண்டு மார்கழி உத்சவத்தில் கச்சேரிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்த வருடம் ’பாடலாசிரியர்கள்’ (கம்போஸர்ஸ்) என்ற பொருளில் கலைஞர்கள் இசைக்கவிருக்கிறார்கள். ஒரு பாடகர் அல்லது ஒரு இசைக்கருவி வாசிப்பவர்களின் கச்சேரி முழுவதும் ஒரு குறிப்பிட்ட பாடலாசிரியரின் பாடல்கள் (கீர்த்தனைகள்) மட்டுமே இடம்பெறும்.

ஒவ்வொரு இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பும் அன்று இடம் பெறபோகும் பாடலாசிரியரின் சிறப்புகள் மற்றும் தனித்தன்மை குறித்து பாடகி சுசித்ரா பாலசுப்ரமணியம் நேயர்களுக்கு விளக்குவார்.

அன்னமாச்சாரியார், தியாகராஜர், முத்துசுவாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, கோபால கிருஷ்ண பாரதியார், அருணாசல கவிராயர், கோடீஸ்வர ஐயர், முத்து தாண்டவர், வள்ளலார் போன்ற பல மகான்களின் பாடல்களை கலைஞர்கள் இசைக்கவிருக்கிறார்கள்.

இந்த இனிமையான இசைக்கச்சேரிகளை மஹதி, சிக்கில் குருசரண், லால்குடி கிருண்ணன் மற்றும் விஜயலட்சுமி (வயலின்), சஷாங்க் சுப்ரமணியம் (புல்லாங்குழல்), ஜே.பி.கீர்த்தனா ஸ்ரீராம், ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா சகோதரிகள் உள்ளிட்ட முன்னணி கலைஞர்கள் வழங்கவிருக்கிறார்கள்.

இவைதவிர ‘ஹரிகதா’ என்று அழைக்கபடும் சங்கீத உபன்யாசங்களும் மார்கழி உத்சவத்தில் இடம்பெறுகின்றன. இதனை விசாகா ஹரி மற்றும் உ.வே.துஷ்யந்த் ஸ்ரீதர் வழங்கவிருக்கிறார்கள்.

மார்கழி உத்சவம் நிகழ்ச்சி டிசம்பர் 17 முதல் ஜனவரி 14 வரை தினமும் காலை 7.30 மணிக்கும், மீண்டும் இரவு 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகும். சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 9.30க்கு ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சி நேயர்களுக்கு ஒரு இசை விருந்தாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *