ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன படிப்புகளில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜே.இ.இ.) முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று www.jeeadv.iitb.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தேர்வை எழுதிய மாணவர்கள் இந்த இணையதளத்திற்கு சென்று தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

என்ஐடி, ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வருகிறது. மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டு கட்டங்களில் இந்த தேர்வு நடத்தப்படும். இதன்படி
முதன்மைத் தேர்வு கடந்த மே மாதம் 24ஆம் தேதி நடத்தப்பட்டது. 1,17,238 மாணவர்கள் எழுதிய இந்த தேர்வின் முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த தேர்வில் 23,407 மாணவர்கள் 3,049 மாணவிகள் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 26,456 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சாத்வத் ஜாக்வானி 504 மதிப்பெண்களுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் தமிழகத்திலிருந்து எழுதிய 2,158 பேரில் 451 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இதில் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த எஸ். ராகவன் என்ற மாணவர் 504-க்கு 364 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவருடன் திருவான்மியூரைச் சேர்ந்த ஹர்பித்சிங் (341), கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் (329), அயனாவரத்தைச் சேர்ந்த அனிரூத் (328), சேத்துப்பட்டுவைச் சேர்ந்த காவியா (327), ஆவடியைச் சேர்ந்த விநாயக் (325), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கவிதா (319), ஈரோட்டைச் சேர்ந்த ஆதவன் நம்பி (318), எழும்பூரைச் சேர்ந்த ஷம்பித் (315), முகப்பேர் மேற்கைச் சேர்ந்த நிஷாக்குமார் (314) ஆகியோர் தமிழக அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனர்.

English Summary : JEE exam results announced. Thrivanmayur Student got State first in JEE exam.