உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் அடுத்த படத்தின் தொடக்கவிழா இன்று காலை சென்னையில் உள்ள நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் தொடக்க விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், லைகா சேர்மன் சுபாஷ்கரன், நாசர், விஷால், கார்த்தி, இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் டைட்டில்களை கமல் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த படத்தின் டைட்டில் ‘சபாஷ் நாயுடு’, என்றும், இந்தியில் ‘சபாஷ் குண்டு’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தசாவதாரம்’ படத்தில் கமல் ஏற்று நடித்த பத்து கேரக்டர்களில் ஒன்றான பல்ராம் நாயுடு கமல் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். முதன்முறையாக கமல்ஹாசன் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். மேலும் கமலின் மனைவியாக ரம்யாகிருஷ்ணனும் உடன் பணிபுரிபவராக நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தாவும் நடிக்கவுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். பிரபல மலையாள பட இயக்குனர் ராஜீவ்குமார் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் 85% படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாகவும் வரும் மே 14ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் ஜூலையில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு இந்த படம் டிசம்பரில் இந்த படம் வெளியாகும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு வாடகையாக ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள காசோலையை கமல், நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Kamal Haasan’s next film title and character declared.