தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு (TET) கடந்த 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பின்பு ஆசிரியர் தேர்வுக்கு புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருந்தது.

இதனால் கிராமப்புற மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் வெயிட்டேஜ் மதிப்பெண் குறைவாக இருப்பதால், ஆசிரியர் பணி கிடைக்காமல் மிகவும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ஒழிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராடி வந்தனர். இதற்காக வழக்குகளும் தொடுக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் இதுகுறித்து விளக்கம் அளித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் தகுதி தேர்வில் இனி வெயிட்டேஜ் முறை இல்லை என அறிவித்தார். இதையடுத்து, இதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இதில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை இனி இருக்காது என தெரிவித்தது. ஆனால், அதற்கு பதில் போட்டி தேர்வு தனியாக நடைபெறும் என்றது.

அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வையும், நியமனத்துக்கான போட்டித் தேர்வையும் தனியாகவும் நடத்தலாம் என்று தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து, டெட்(ஆசிரியர் தகுதித் தேர்வின்) பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நடப்பு கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அண்மையில் பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15 நாட்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, பின்னர் ஆன்லைன் மூலம் தகுதி தேர்வு நடத்தப்படும் என்றார். இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பட்டியல் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *