ரயிலில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் தங்களது பயணத்துக்கு இ டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயிலில் பயணம் செய்ய இ-டிக்கெட் எடுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய வசதியை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் ரயிலில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாகவும், இந்த அடையாள அட்டையை பெற மருத்துவச் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை, வயது வரம்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் அந்தந்த ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வணிகப் பிரிவை அணுகி பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த புதிய அடையாள அட்டையை அந்தந்த ரயில்வே கோட்ட மேலாளர் வணிகப் பிரிவின் அலுவலக முகவரிக்கு சான்றிதழ்களின் நகல்களை தபாலில் அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் அடையாள அட்டையை வேறொருவர் பயன்படுத்தக் கூடாது என்றும் ஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் அசல் அடையாள அட்டையை மட்டுமே பயணிகள் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.