இந்தியாவில் கோடிக்கணக்கில் கள்ள நோட்டுக்கள் புழங்கி வருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளால் அதனை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி பலவிதமான முயற்சிகளை செய்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் கள்ள நோட்டுக்களை தடுக்க அவ்வப்போது ரூபாய் நோட்டுக்களில் பல்வேறு சீர்திருத்தங்களை ஆர்.பிஐ. செய்து வரும் நிலையில் தற்போது ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் ஆர் என்ற ஆங்கில எழுத்தை அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் நோட்டின் இரண்டு பக்கங்களிலும் எண்களுக்கான பகுதியில் ஆர் என்ற எழுத்து அச்சடிக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளதாக ஆர்பிஐ இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

புதிதாக அச்சடிக்கப்படும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனின் கையெழுத்தும், 2016 என்பது பின்பிருந்து முன்பாகவும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

மற்றபடி, தற்போது புழக்கத்தில் உள்ள ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் இருக்கும் அனைத்து அம்சங்களும் அப்படியே இருக்கும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Reserve Bank will find new way to avoid fake rupees.