vegetable-71215-1-1
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இருந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதிய நிலையில் சென்னையில் 81 சதவீத பெட்ரோல் பங்க்கள் செயல்படுவதால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

200-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டு சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் தற்போது 81 சதவீத இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க்கள் செயல்படுகின்றன. விநியோகத்தை சீராக்குவதற்காக திருச்சி, பெங்களூரு, சித்தூர் ஆகிய நகரங்களில் இருந்து பெட்ரோல், டீசல் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவவில்லை.

இதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டரும் தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வௌ்ளம் பாதித்த இடங்களில் 45,186 சிலிண்டர்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary-No shortage of petrol in Chennai-ioc