டெல்லி: வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. கடந்த 4 மாதங்களாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து விட்டதாக வானிலை மையம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும் என்றும் அதற்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

புயலாக மாறியது: மேலும் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறியுள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது

அதிதீவிர புயலாக மாறும்: இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என்றும அடுத்த 5 நாட்களில் ஓமனை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

ஒடிசா நோக்கி நகரும்: மேலும் தென் கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒடிசா நோக்கி நகரும் என்றும் வானிலை மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் காரணமாக மீனவர்கள் அக்டோபர் 12 ஆம் தேதி வரை அரபிக் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் காற்றழுத்தம் காரணமாக அக்டோபர் 11ஆம் தேதி வரை வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *