சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே தற்போது 2 பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே ரூ.300 கோடி மதிப்பில் 4-வது புதிய பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, நடப்பு பட்ஜெட்டிலும் ரூ.96.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை விரைந்து முடிக்க ரயில்வேவாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை இருந்து வந்தது.இப்பிரச்சினைக்கு பேச்சுவார்தை மூலம் தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து, கடற்கரை – எழும்பூர்4-வது பாதைக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

இதுதொடர்பாக சென்னை ரயில்வேகோட்ட அதிகாரிகள் கூறும்போது, “கடற்கரை – எழும்பூர் இடையே 4.3 கி.மீ. புதிய பாதை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 4-வது புதிய பாதை அமைக்கும் பணிகளை ஆக.28-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளின்போது மேற்கொள்ளப்படும் ரயில் சேவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *