சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்குவதை நிறுத்தி வைத்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை சேர்ந்த எம்.கருணாநிதி தாக்கல் செய்த மனு: வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு 2,௦௦௦ ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.

வறுமை கோட்டுக்கு கீழ் வருபவர்கள் மட்டும் அல்லாமல் தகுதியற்றவர்களுக்கும் உதவித் தொகை வழங்கும் விதத்தில் உள்ளது. உதவித் தொகை வழங்கும் முன் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை அடையாளம் காண உத்தரவிட வேண்டும்; அதுவரை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது. விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை குறித்து, அட்வகேட் ஜெனரல் சந்தேகம் எழுப்பியிருந்தார்.

அதற்கு, நீதிபதிகள் ‘தலைமை செயலகத்தில் இருந்து அரசாணை நகல் வெளியானது குறித்து, விசாரிக்க வேண்டும்’ என்றனர். அப்போது, அரசு தரப்பில், தேர்தல் நடத்தை விதிகள் அமலால் 2,௦௦௦ ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்குவதும், அதற்கான கணக்கெடுப்பு பணியும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை, தேர்தலுக்கு பின் தள்ளி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *