அரக்கோணம் – தக்கோலம் புதிய பாதையில் சிக்னல் மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்வதாலும், மெயின் லைனில் தண்டவாளங்களை இணைக்கும் பணிகள் காரணமாகவும் சென்னை – ஜோலார்பேட்டை வழித்தடத்தில், வரும் ஏப்ரல் 4 முதல் 14-ஆம் தேதி வரை ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரக்கோணம் – தக்கோலம் இடையே அமைக்கப்பட்ட புதிய இருப்புப் பாதையை அரக்கோணத்தில் உள்ள பழைய இருப்புப் பாதைகளோடு இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காகவும், சிக்னல் மற்றும் பொறியியல் பணிக்காகவும் வரும் ஏப்ரல் 4 முதல் 14-ஆம் வரை ரயில்களின் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும் பெங்களூரு டபுள் டெக்கர் அதிவிரைவு ரயில் ஏப்ரல் 11, 12, 13, 14-ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று பெங்களூரில் மதியம் 2.30 மணிக்குப் புறப்படும் சென்னை சென்ட்ரல் டபுள் டெக்கர் அதிவிரைவு ரயில் ஏப்ரல் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு காலை 6 மணிக்குப் புறப்படும் சதாப்தி விரைவு ரயில், சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாலை 5.30 மணிக்குப் புறப்படும் சதாப்தி ரயில் ஆகியவை ஏப்ரல் 14-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு காலை 6.30 மணிக்குப் புறப்படும் லால்பாக் அதிவிரைவு ரயில் காட்பாடி – சென்னை இடையே ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் இந்த ரயில் சென்னை சென்ட்ரல் – சோளிங்கபுரம் இடையே ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ரத்து செயயப்படுகிறது.

மைசூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் (எண்: 12610) அதிவிரைவு ரயில் காட்பாடி- சென்னை சென்ட்ரல் இடையே ஏப்ரல் 5-ஆம் தேதி முதல்

14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதே ரயில் மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் – சோளிங்கபுரம் இடையே ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

வாஸ்கோடகாமாவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் ஜோலார்பேட்டை – சென்னை இடையே ஏப்ரல் 4 மற்றும் 11-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரயில் ஏப்ரல் 5 மற்றும் 12-ஆம் தேதிகளில் சென்னை – ஜோலார்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.

ஹூப்ளியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் ஜோலார்பேட்டை – சென்னை இடையே ஏப்ரல் 6 மற்றும் 13-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரயில் ஏப்ரல் 7 மற்றும் 14-ஆம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.

பெங்களூரு – சென்னை இடையே இயக்கப்படும் பிருந்தாவன் அதிவிரைவு ரயில் ஏப்ரல் 14-ஆம் தேதி சோளிங்கபுரம் – சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மேலும் பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. அதன் விவரம்: தனாப்பூர் – பெங்களூரு சங்கமித்ரா அதிவிரைவு ரயில் ஏப்ரல் 12-ஆம் தேதி கூடூர் – சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் – காட்பாடி வழித்தடத்திற்கு பதிலாக கூடூர் – ரேணிகுண்டா – திருப்பதி – காட்பாடி வழியாக இயங்கும். இதே ரயில் மறுமார்க்கத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை காட்பாடி – அரக்கோணம் – சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்திற்கு பதிலாக காட்பாடி – திருப்பதி – கூடூர் வழியாக இயக்கப்படும்.

பெங்களூரு – தர்பங்கா அதிவிரைவு ரயில் ஏப்ரல் 13-ஆம் தேதி காட்பாடி – சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்திற்கு பதிலாக காட்பாடி – திருப்பதி – கூடுர் வழித்தடத்தில் இயங்கும். யஷ்வந்த்பூர் – காமாக்யா அதிவிரைவு ரயில் ஏப்ரல் 3 மற்றும் 10-ஆம் தேதிகளில் காட்பாடி – சென்னை – கூடூருக்கு பதிலாக காட்பாடி – சென்னை சென்ட்ரல் -கூடூர் வழியாக இயங்கும்.

பெங்களூரு – சென்னை மெயில் ஏப்ரல் 13-ஆம் தேதி காட்பாடி- அரக்கோணம் வழித்தடத்திற்கு பதிலாக காட்பாடி – வேலூர்- திருவண்ணாமலை – விழுப்புரம் – சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படும்.

சில ரயில்களில் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன் விவரம்: சென்னை சென்ட்ரல் – சாய்நகர் வாராந்திர ரயில் ஏப்ரல் 10ஆம் தேதி காலை 10.10 மணிக்கு பதிலாக மதியம் 1.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். யஷ்வந்த்பூர் – ஹெளரா அதிவிரைவு ரயில் ஏப்ரல் 14-ஆம் தேதி காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 3 மணிக்கு யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *