தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: இந்தியக் கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

உள் தமிழகத்தின் சில இடங்களில் வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. சென்னையில் காலை வேளையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும்.

அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது. 3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர்பரமத்தி, சேலத்தில் தலா 101 டிகிரி வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையத்தில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. தருமபுரி, மதுரை தெற்கு, பாளையங்கோட்டை, திருச்சி, திருத்தணியில் தலா 99 டிகிரி வெப்பநிலை பதிவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *