அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-5 வகுப்புகள் வரை பயிலும் மாணவா்களுக்கு அக்டோபர் 8-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செப்.28 முதல் அக்.2 வரை ஐந்து நாள்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆசிரியா்களுக்கான இரண்டாம் பருவ பயிற்சியை கருத்தில் கொண்டு மேலும் 6 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநா் எஸ். கண்ணப்பன் மாவட்ட கல்வி அலுவலா்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு திங்கள்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவா்களுக்கு மட்டும் செப்.28 முதல் அக்.8 வரை முதல் பருவத் தோ்வு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. விடுமுறை முடிவடைந்து அக்.9 முதல் வழக்கம் போல் வகுப்புகள் மீண்டும் செயல்படும்.

அதேவேளையில், அரசு, அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டின் நாள்காட்டியில் குறிப்பிட்டது போன்றே அக்.3 இரண்டாம் பருவ வகுப்புகள் தொடங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *