பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க நாவல்`பொன்னியின் செல்வன்` இணையதளத்தில் படமாக வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா தென்னிந்திய பொறுப்பாளராக இருக்கும் ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையை இணையதள திரைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ராஜராஜ சோழனின் பெருமைகளை எடுத்துரைக்கும் இந்த நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன் ஆகிய பிரபல நடிகர்களும், மணிரத்னம் போன்ற இயக்குனர்களும் முயற்சி செய்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த நாவல் திரைப்படமாக்கப்படவில்லை.

ஐந்து பாகங்கள் கொண்ட மிகப்பெரிய நாவல் அடங்கிய இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடுவது சாத்தியமில்லை என்பதால் பல பகுதிகளாகப் பிரித்து இணையதள திரையில் பதிவேற்றி ரசிகர்களைக் கவர இராஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக ஈராஸ் நிறுவனம் “திரைவடிவமாகவோ ,அல்லது விசிடி வடிவிலோ அல்லாமல் ஒவ்வொரு பகுதியும் இணையத்தில் பதிவேற்றப்படும். இந்த படத்தை பார்க்க விரும்புபவர்கள் ஒவ்வொரு பாகத்திற்கும் உரிய கட்டணத்தை செலுத்தி பார்த்துக் கொள்ளலாம்” என்று அறிவித்துள்ளது.

வந்தியத்தேவன், ராஜராஜ சோழன், குந்தவை, நந்தினி,மதுராந்தகர், ஆழ்வார்க்கடியன் போன்ற வரலாற்று சிறப்புமிக்க பாத்திரங்களைக் கொண்ட நாவல் என்பதால் தமிழின் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இந்த நாவலுக்கு திரைக்கதை எழுதுவார் என்றும் படப்பிடிப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறுவதாகவும் ஈராஸ் கூறியுள்ளது.

English Summary : Rajini ‘s daughter by trying to be released on the Internet ‘Ponniyin Selvan’