தமிழகத்தில் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதால் ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, இன்றும் கூடுதல் டோக்கன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அதிகளவு பத்திரப்பதிவுகள் நடக்கும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று முன்தினம் அக்.18-ம் தேதி ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதன் விளைவாக நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.

சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் ஐப்பசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்றும் (அக்.20) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அக். 20-ம் தேதி கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் தர பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதில் 300 டோக்கன்களும், அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் மற்றும் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன் என 16 டோக்கன்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *