சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்த ‘வாலு’ திரைப்படம் பலவித பிரச்சனைகளுக்கு பின்னர் இளையதளபதி விஜய் உதவியினால் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த பிரஸ்மீட்டில் செய்தியாளர்களின் சுவாரசியமான கேள்விகளுக்கு சிம்பு தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார்.

அஜீத் ரசிகரான உங்களுக்கு விஜய் உதவி செய்தது எப்படி என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய சிம்பு, “‘வாலு பிரச்சனைக்காக நான் யாரிடமும் உதவி கேட்கவில்லை. ஆனால் விஜய் தானாகவே முன்வந்து ‘வாலு’ பட ரிலீஸுக்கு உதவி செய்தார். அதே நேரத்தில் ‘சிம்பு எந்த பிரச்சனையும் பார்த்துப்பான்’ என்று அஜீத் நம்பிக்கை தெரிவித்தார். விஜய், அஜீத், கமல் என நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பம். யாருக்காவது ஒரு பிரச்சனை ஏற்பட்டால் நாங்கள் எல்லோருமே முன்னாடி வந்து நிற்போம்’ என்று கூறினார்.

மேலும் விரைவில் நடைபெறவிருக்கும் நடிகர் சங்க தேர்தலில் உங்கள் ஆதரவு சரத்குமாருக்கா? அல்லது விஷாலுக்கா? என கேட்ட கேள்விக்கு பதிலளித்த சிம்பு, “சரத்குமார் நடிகர் சங்கத்திற்கு நிறைய உழைத்துள்ளார். அவர் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. எனவே எனது ஆதரவு எப்போதுமே அவருக்கு உண்டு. ஆனாலும் விஷால், விஷ்ணு, கார்த்தி ஆகியோர்களும் எனது நண்பர்கள்தான். நடிகர் சங்கம் இரு அணிகளாக பிரியாமல் ஒரே அணியாக அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்று கூறியுள்ளார்.

மேலும் வாலு படத்தின் ரிலீஸுக்கு பின்னர் ரஜினி கூறியது என்ன என்பது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த சிம்பு, “மூன்று வருட இடைவெளிக்கு பின் வாலு’ படம் வந்தாலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, இந்த வரவேற்பை அப்படியே தக்க வைத்து கொள்” என ரஜினி அறிவுரை கூறியதாகவும், அவருடனான சந்திப்பு தனக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்ததாகவும் சிம்பு கூறியுள்ளார்.

மேலும் அடுத்த கேள்வியும் அதற்கு சிம்பு அளித்த பதிலும்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு நிருபர் கேட்ட கேள்வி இதுதான், ”நயன்தாராவுக்கும் ‘நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில், இது உண்மையாக இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று கேள்விதான் அனைவரையும் அதிர வைத்தது. ஆனால் சிம்பு இந்த கேள்விக்கு கேஷுவலாக பதிலளித்தார். ”’நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்படிப்பட்ட உறவு என்பது எனக்கு தெரியாது. இருவருமே எனக்கு நெருக்கமானவர்கள்தான். “ஒருவேளை அவர்கள் இருவரும் காதலிப்பது உண்மையாக இருந்தால் ‘நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை நானே முன்னின்று நடத்தி வைப்பேன்’ என்று கூறினார். மேலும் தனக்கு எதிர்காலத்தில் திரைப்படங்களை இயக்கும் எண்ணம் உள்ளது என்றும், அவ்வாறு முழு நேர இயக்குனர் ஆனால் அஜீத், ரஜினிகாந்த் ஆகியோர் நடித்த படங்களை இயக்க விருப்பம்’ என்றும் சிம்பு கூறியுள்ளார்.

English Summary : Simbu replied to his fan that he will lead Nayanthara marriage himself.