மாற்றுத் திறனாளிகள் சலுகை அடிப்படையிலான ரயில் டிக்கெட்டை பதிவு செய்ய அவர்களுக்கான “தனித்துவ அடையாள அட்டையை’ (யுடிஐடி) பயன்படுத்துவதை அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சலுகை அடிப்படையில் ரயில் டிக்கெட் பதிவு செய்ய, ரயில்வே வழங்கிய தனி அட்டையை பயன்படுத்துவதா அல்லது அரசு வழங்கிய யுடிஐடியை பயன்படுத்துவதா என்ற குழப்பம் மாற்றுத் திறனாளிகளிடையே நிலவி வருகிறது. இந்நிலையில், சலுகை டிக்கெட் பெற அரசு வழங்கும் யுடிஐடியையே பயன்படுத்த அனுமதி அளிக்கக் கோரி “மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கான தேசிய மேடை’ என்ற அமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் கடந்த 9-ஆம் தேதி பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி ஜெய்ராம் பம்பனி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான தேசிய மேடை (என்பிஆர்டி) சார்பில் வழக்குரைஞர்கள் சுரேந்திரநாத், சுபாஷ் சந்திரன் ஆகியோர் ஆஜராகி, மனுவில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளை விவரித்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய சமூக நலத் துறை அமைச்சகம், ரயில்வேத் துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணை ஜூலை 26-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *