இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஏப்ரல் 13) கடைசி நாள் ஆகும்.

எம்பிபிஎஸ், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ முறை படிப்புகளான பிஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎஸ்எம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் 2023ம் ஆண்டில் மாணவ, மாணவியரை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (NEET) மே 7ம் தேதி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடக்க உள்ளது.

இதற்காக மார்ச் 6ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை கடந்த மாதம் அறிவித்தது. மேலும் இந்த நுழைவுத் தேர்வு ஆங்கிலம், தமிழ், தெலுங்கு உள்பட 12 மொழிகளில் மொழிகளில் நடக்கிறது.

இந்நிலையில், கடந்த 6ம் தேதியுடன் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து அதே நாள் இரவில் கட்டணங்களையும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேநேரத்தில், பல்வேறு மாணவர்களால் மேற்கண்ட தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் திருத்தங்களையும் செய்ய முடியாமல் தவித்தனர்.

இதன் காரணமாக மேலும் தங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் நலன் கருதி, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வசதியாக 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஏப்ரல் 13) நிறைவு பெறுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் இன்று (13-ந்தேதி) நள்ளிரவு 11.30 மணிவரை விண்ணப்பிக்கலாம்.

13-ந்தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும் விவரம் அறிய 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *