தற்போது தென் தமிழகத்தின் மிகப் பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் விளங்குகிறது . இங்கு கள்ளிமந்தையம், விருப்பாட்சி, புதுசத்திரம், கேதையறும்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த பகுதி நாட்டு தக்காளிகள் சுவை மிகுந்து காணப்படுவதால் வெளி மாவட்ட வியாபாரிகள் ஆர்வமுடன் தக்காளிகளை வாங்கி செல்கின்றனர். கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்து காணப்பட்டதால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.50 முதல் ரூ.60 வரையே விற்பனையானது.

இதன் காரணமாக விவசாயிகள் கடும் வேதனையடைந்து வருகின்றனர். பறிப்பு கூலிக்கு கூட விலை கிடைக்காததால் விரக்தியடைந்த அவர்கள் தக்காளிகளை செடிகளிலேயே விட்டு விட்டனர். இப்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை ஓரளவு உயர்ந்து காணப்படுகிறது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.140 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் ஓரளவு நிம்மதி அடைந்து தக்காளிகளை கொண்டு வர தொடங்கியிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *