exams-231115சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை சட்டக் கல்லூரி, மாநிலக் கல்லூரி, அண்ணா பல்கலைகழகம் உள்ளிட்ட பல்கலை கழகங்களின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நவம்பர் 28ம் தேதி வரையில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைகழக பதிவாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழக தேர்வு, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்தந்த பல்கலைக் கழக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். தேர்வு நடைபெறும் புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அம்பேத்கார் சட்டபல்கலை கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் சட்டகல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சட்ட பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்திருந்தனர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கனமழை காரணமாக மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English summary-University exams postponed due to heavy rain