heavenவைகுண்ட ஏகாதசியையொட்டி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கோவிந்தா… கோவிந்தா… என்ற முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீரங்கத்தில் திறக்கப்பட்ட சொர்க்க வாசலில், ரங்கநாதர் சுவாமி அருள்காட்சி தந்தார். எதிர்சேவையில் நம்மாழ்வாருக்கு காட்சி தந்த ரங்கநாதரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா… ரங்கா… என்ற முழக்கத்துடன் வணங்கி தரிசனம் செய்தனர். இதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு எதிர்சேவையில் காட்சித் தந்தார். எதிர்சேவையில் காட்சி தந்த பார்த்தசாரதி பெருமாளை கோவிந்தா… கோவிந்தா… என்ற முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில், திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயில், கும்பகோணம் நாச்சியார் சீனிவாச பெருமாள் கோயில், சீர்காழி தாராளன் பெருமாள் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், மதுரை அழகர் கோயில், விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் அருகே உள்ள கலிங்கமலை ரங்கநாதர் கோயில். சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயில், ஆத்தூர் வெங்கடேச பெருமாள் கோயில், போடி சீனிவாச பெருமாள் கோயில் என தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள பெருமாள் கோயில்களிலும், புதுச்சேரியில் உள்ள பெருமாள் கோயில்களிலும் இன்று அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

English Summary:Vaikuntha Ekadasi: Perumal temple this morning at the opening of the gate of Heaven!