ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளை அடுத்து வரும் ‘காணும் பொங்கல்’ நாளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மெரினா பீச், வண்டலூர் பூங்கா உள்பட பல இடங்களில் கூடும் வழக்கம் உண்டு. அதேபோல் இந்த வருடமும் ஏராளமான மக்கள் வரும் காணும் பொங்கல் தினத்தில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி, வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பூங்காவுக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு, பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் வண்டலூரில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது, பார்வையாளர்களை ஒழங்குப்படுத்தும் பணி ஆகியவற்றை காவல் துறையினர் மேற்கொள்ளுதல், பொங்கல் பண்டிகை காலங்களில் சுமார் 4 லட்சம் லிட்டர் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், கூடுதல் பேருந்துகள இயக்குதல், தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்களை நிறுத்துதல், தடையற்ற மின்சாரம் வழங்குதல், முதலுதவிக்காக மருத்துவக் குழு அமைத்தல் ஆகியவை உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

கடந்த பொங்கல் பண்டிகையின்போது 1,04,546 பார்வையாளர்கள் வருகை புரிந்த நிலையில் இந்த ஆண்டும் அதிகப்படியான பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Vandalur Zoo made Special arrangements for Maatu pongal.