தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் எந்த நேரமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற நிலை உள்ளது. இதனால் சரத்குமார் அணியும், விஷால் அணியும் விறுவிறுப்பாக தங்கள் அணிக்காக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று விஷால் அணியினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர்களை நேரில் சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர்.

ரஜினிகாந்த் தரப்பில் இருந்து தேர்தல் நேரத்தில் தான் மலேசியாவில் படப்பிடிப்பில் இருப்பதாகவும் இருந்தாலும் கண்டிப்பாக தேர்தல் தினத்தில் ஓட்டு போட சென்னை வருவதாக உறுதி கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கமல்ஹாசன் தரப்பில் இருந்து விஷால் அணிக்கு பகிரங்கமாக ஆதரவு கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. நடிகர் சங்கத்தில் கண்டிப்பாக மாற்றம் வேண்டும் என்று கமல் விரும்புவதால் எங்களுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார் என நாசர் கூறியுள்ளர். மேலும் பிரபல நடிகை குஷ்பு தனது ஓட்டு விஷாலுக்கே என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கமல், ரஜினியை அடுத்து கோலிவுட்டில் இளையதளபதியாக விளங்கி வரும் விஜய்யையும் நேற்று கார்த்தி மற்றும் நாசர் சென்று சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டியுள்ளனர். விஜய்யுடனான சந்திப்புக்கு பின்னர் கார்த்தி செய்தியாளர்களிடம் கூறியபோது “பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே தனக்கு விஜய்யை நன்கு தெரியும் என்றும் அந்த அடிப்படையில் அவரை கேஷுவலாக மீட் செய்தாகவும், நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு போட வாருங்கள் என்று அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். மேலும் கண்டிப்பாக அவர் தங்கள் அணிக்கு ஆதரவு தருவார் என தான் நம்புவதாகவும் கார்த்தி தெரிவித்தார். கமல், ரஜினி, விஜய்யை அடுத்து விஷால் அணியினர் அஜீத்தை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், அஜீத் தற்போது படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், எந்த நேரமும் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

English Summary : Vishal team asks support from Rajini, Kamal, Vijay to support in South Indian Actors Association Election.