தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18 நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றத்தால் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தற்போது தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் இரு அணியினர்களும் நடிகர் சங்க தலைவர், செயலாளர் பதவிகள் உள்பட அனைத்து பதவிகளுக்கும் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் முதல் முறையாக களமிறங்கும் நடிகர் விஷால், தனது வியூகம் குறித்து கூறியுள்ளதாவது: “எங்களுடைய பிரச்சார அம்சத்தில் முக்கியமானது யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைவிட அனைத்து நடிகர்களையும் ஓட்டு போட வைக்க வேண்டும் என்பதுதான். நடிகர் சங்கத்தில் மொத்தம் 3148 உறுப்பினர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அத்தனை பேரும் ஓட்டு போட வேண்டும் என்பதே எங்களது முதல் கட்ட பிரச்சாரம்.

நடிகர் சங்கம் என்பது சிங்கிள் சங்கம் அல்ல. இது நடிகர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சங்கம். இந்த சங்கத்தில் ஒரு தவறு நடந்ததால்தான் நாங்கள் தட்டி கேட்க முன்வந்துள்ளோம். பத்து வருடங்கள் கழித்து நடைபெறவுள்ள இந்த தேர்தலில் எங்கள் அணிக்கு யார் யாரெல்லாம் ஆதரவு கொடுத்துள்ளார்கள் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் எங்கள் அணி உறுதியாக வெற்றி பெறும். வெற்றி பெற்றவுடன் நல்லது நடக்கும். இதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்

நடிகர் சங்கம் என்பது ஒரு குடும்பம் மாதிரி. அக்டோபர் 18ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் வெற்றி பெற்ற அணியுடன் தோல்வி அடைந்த அணி இணைந்து மீண்டும் ஒரு குடும்பமாக ஒற்றுமையாக இருக்கும். அக்டோபர் 19ஆம் தேதி முதல் இரு அணிகளும் ஒன்றாக இணைந்து நலிந்த நடிகர்களுக்காக பாடுபடுவோம்.

இவ்வாறு நடிகர் விஷால் கூறியுள்ளார்.

English Summary : Vishal explain What happens after the actor’s union election.