தந்தி சேவையை அடுத்து 135 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மணி ஆர்டர் சேவைக்கும் தற்போது மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 1850ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தந்தி சேவை தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலையில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் மணி டிரான்ஸ்பர் போன்ற துரித பணப்பரிமாற்றம் வளர்ந்து வரும் நிலையில், அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த மரபார்ந்த `மணி ஆர்டர்’ சேவையும் சத்தமில்லாமல் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இருந்து முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்தியா போஸ்ட்டின் துணை இயக்குநர் (நிதி) ஷிகா மதூர் குமார் கூறுகையில், “மரபார்ந்த மணி ஆர்டர் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்குப் பதிலாக, தற்போதுள்ள இ.எம்.ஓ. மற்றும் ஐ.எம்.ஓ. சேவைகள் விரைவாகவும், சுலபமாகவும் பணப் பரிமாற்றம் செய்வதற்கு உதவுகிறது” என்றார்.

கடந்த 2008ஆம் ஆண்டு, அஞ்சல் துறையில் மணி ஆர்டர் சேவையைத் துரிதப்படுத்த இ.எம்.ஓ. என்ற `எலக்ட்ரானிக் மணி ஆர்டர்’ சேவை மற்றும் ஐ.எம்.ஓ. என்ற `இன்ஸ்டன்ட் மணி ஆர்டர்’ சேவை ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி இ.எம்.ஓ. மூலமாக ரூ.1 முதல் ரூ.5,000 வரையிலான தொகையை மணி ஆர்டர் செய்தால் அதே நாளில் பண பரிமாற்றம் நிகழ்ந்து விடும். அதேபோல ஐ.எம்.ஓ. மூலமாக ரூ.1,000 முதல் ரூ.50,000 வரையிலான தொகையை மணி ஆர்டர் செய்தால் இணையம் மூலம் உடனடிபண பரிமாற்றம் நிகழ்ந்துவிடும்.