electioncommission9216தமிழக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் காலங்களில் நாடகங்கள் நடத்த தடைவிதிக்க கூடாது என்பதை வலியுறுத்தும் கோரிக்கை மனு ஒன்றை நேற்று நடிகர் சங்கத்தின் பிரதிநிதிகள் தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்து கொடுத்துள்ளனர். நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் தலைமையில் அளித்த கோரிக்கை மனுவின் முழுவிபரங்கள் பின்வருமாறு:

எங்களது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களில் 1000-க்கு மேற்பட்டோர் தமிழகமெங்கும் உள்ளனர். அவர்கள் நாடக துறையை சார்ந்தவர்கள். நாடகம் என்பது திருவிழா காலங்களில் மட்டுமே நடத்தப்படும். அதற்கான சூழல் வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கும். அக்காலகட்டத்தில் கிடைக்கும் வருமானத்தில்தான் வருடம் முழுவதும் குடும்பம் நடத்த வேண்டும். சினிமா, தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு சாதனங்களால் நாடகத்துறை அழிந்து வருகின்ற இந்த காலகட்டத்தில் அதையே நம்பி வாழும் நாடகக் கலைஞர்கள் மிகுந்த கஷ்டத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

ஆனால், கடந்த பொது தேர்தலில் இருந்து தேர்தல் காலங்களில் நாடகம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதால் இக்கால கட்டமான மூன்று மாதங்களும் எங்கள் நாடக கலைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடுகிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி தொகை கட்ட கூட முடியாமல் போகிறது. எனவே, இதை தாங்கள் பரிசீலித்து இந்த கால கட்டத்தில் நாடகம் நடத்துவதற்கு சிறப்பு அனுமதி வழங்கி உதவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அதற்காக தாங்கள் விதிக்கும் விதிகளுக்கு கட்டுப்பட்டு அவர்கள் நடப்பார்கள்

இவ்வாறு நடிகர் சங்கத்தின் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Actors Association Request to Election Commision.