சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘பாபா’ படத்திற்கு பின்னர் எந்த படத்திலும் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கவில்லை. தான் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதால், ரசிகர்கள் மற்றும் இளைஞர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரிப்பதாக வெளிவந்த புகாரை அடுத்து புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நிறுத்தியது மட்டுமின்றி, தனது ரசிகர்கள் யாரும் புகை பிடிக்க வேண்டாம் என அவர் வேண்டுகோளும் விடுத்திருந்தார். இந்நிலையில் அவரது மருமகன் தனுஷ் நடித்த ‘மாரி’ படத்தில் மிக அதிகளவிலான புகைப்பிடிக்கும் காட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாமக கட்சியின் அன்புமணி ராமதாஸ், நடிகர் தனுஷ் அவர்களுக்கு கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “இன்று தமிழ்நாட்டின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக நீங்கள் திகழ்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். ‘மாரி’ திரைப்படத்தின் ஏராளமான காட்சிகளில் நீங்கள் புகைபிடித்தபடி நடித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் உங்களுடைய ரசிகர்களாக இருக்கும் நிலையில் இந்த தவறான செயல் உங்கள் ரசிகர்களை புகையிலைக்கு அடிமையாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன்.

புகையிலை பொருட்களால் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, தோல் நோய்கள், ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை என பல கேடுகள் நேர்கின்றன. இளைஞர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் இடம்பெறும் புகைபிடிக்கும் காட்சிகள் முக்கிய காரணமாக உள்ளன. ‘மாரி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புகைபிடிக்கும் காட்சிகள் தற்செயலானவை அல்ல என்றே கருத வேண்டியுள்ளது. பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், கடைகளிலும் புகையிலை விளம்பரம் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதால், சிகரெட் நிறுவனங்களின் சட்டவிரோத விளம்பர களமாக திரைப்படங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்டவர்கள் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்து அதனை உறுதியாக பின்பற்றியும் வருகின்றனர். அதைவிட முக்கியமாக, உங்களது மாமனாரும், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என புகழப்படுபவருமான நடிகர் ரஜினிகாந்த், திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தனது ரசிகர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக பண்பாட்டில் மாமனார் என்பவர் தந்தைக்கு சமமானவராக கருதப்படுகிறார். தந்தையின் புகழை காப்பாற்றும் கடமை மகனுக்கு இருப்பது போல மாமனாரின் புகழை காப்பாற்ற வேண்டிய கடமை மருமகனுக்கும் உண்டு. திரைப்படங்களில் புகைபிடிக்கும் உங்களது செயல் உங்களது மாமனார் நடிகர் ரஜினிகாந்தின் புகழுக்கு இழுக்கு செய்வதாக அமைகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, தமிழ்நாட்டின் பல லட்சம் சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நீங்கள் கைவிட வேண்டும். மேலும், இனி திரைப்படங்களில் புகைபிடிக்க மாட்டேன் என பகிரங்கமாக அறிவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக இளைஞர்களின் நலனுக்காக மட்டுமின்றி, உங்களது உடல்நலத்துக்காகவும் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நீங்கள் கைவிட வேண்டும் என்று உங்களது சகோதரனாக, ஒரு மருத்துவனாக கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் நீண்ட ஆயுளைப் பெற்று, தமிழ் திரையுலகில் பலப்பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

அன்புமணியின் அறிவுரையை ஏற்று இனிவரும் திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தனுஷ் தவிர்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English Summary : Anbumani Ramadas advised Dhanush to avoid smoking scenes in his films.