ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை பதிவு செய்தால் சிறைதண்டன விதிக்கும் சட்ட பிரிவான ’66-அ’ என்ற சட்டப்பிரிவை ரத்து செய்வதாக சுப்ரீம் கோர்ட் நேற்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு சிவசேனை கட்சி தலைவர் பால் தாக்கரே காலமான போது, ஃபேஸ்புக் இணையதளத்தில் ஆட்சேபகரமான கருத்து கூறிய இளம்பெண்ணையும், அந்த கருத்துக்கு லைக் போட்ட மற்றொரு பெண்ணையும் மகாராஷ்டிரா போலீஸார் கைது செய்தனர். இத்தகைய கைது நடவடிக்கைகளை எதிர்த்து சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கு ஒன்றின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் செலமேஸ்வரர், நாரிமன் அடங்கிய அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில், ‘கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயக நாட்டில் மிகவும் அவசியமான ஒன்று. தகவல் தொழில்நுட்பக் குற்றங்களுக்கான சட்டத்தின் “66-அ’ பிரிவு மக்களின் கருத்து உரிமையை நேரடியாகப் பாதிக்கும் வகையில் உள்ளது. சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துகள் ஒருவருக்கு ஆட்சேபகரமாகத் தோன்றும் அதே நேரத்தில் அதே கருத்து மற்றொருவருக்கு வேறுமாதிரியாகத் தோன்றலாம். எனவே, இந்தச் சட்டப் பிரிவை ரத்து செய்து இந்த கோர்ட் உத்தரவிடுகிறது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்பை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வரவேற்றுள்ளார்.

English Summary : Cancel the provision of social network concepts . Supreme Court Judgment