madras_court
சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் தற்போது செயல்பட்டு வரும் பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கூடுதல் நடுவர் நீதிமன்றம், பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள் ஆகியவை வரும் 1ஆம் தேதி முதல் படிப்படியாக மூர் மார்க்கெட் வளாகத்தில் உள்ள 2 மற்றும் 3வது மாடிக்கு மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட கோர்ட்டுகள் அனைத்தும் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் செயல்படுவதுடன் சிறிய அறைகளில் இட வசதியின்றி செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் நீதிமன்றத்திற்கு வருபவர்களும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன நீதிமன்ற வளாகத்தை அமைக்க வேண்டும் என்று வக்கீல்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

வக்கீல்களின் கோரிக்கையை ஏற்று 10 கோடியே 88 லட்சம் செலவில் எழும்பூர் கோர்ட்டுகள் நவீன வசதிகளுடன் புதுப்பித்து கட்டப்படுகிறது. விரைவில் கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால் எழும்பூரில் செயல்படும் அனைத்து கோர்ட்டுகளும், மூர் மார்க்கெட் (அல்லிகுளம்) வளாகத்தில் உள்ள கட்டிடத்துக்கு தற்காலிகமாக மாறுகிறது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் எழும்பூர் கோர்ட்டு வளாகத்தில் சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நீதிபதி ஏ.முருகன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் எழும்பூர் கோர்ட்டு நீதிபதிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வக்கீல்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ஜூலை 1ஆம்தேதி முதல் எழும்பூர் கோர்ட்டுகள் அனைத்தும் புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை படிப்படியாக மூர் மார்க்கெட் வளாகத்தில் உள்ள 2 மற்றும் 3வது மாடிக்கு மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

 

English Summary : Chennai office market from July 1 to change Moore.