பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையில் சூரியன் வரவிருப்பதால் பூமியுடனான மங்கள்யானின் அனைத்து தொடர்புகளும் ஜூன் மாதத்தில் துண்டிக்கப்படும். ஜூன் மாதத்தில் 15 நாட்களுக்கு மங்கள்யானுடன் இஸ்ரோவுக்கு எந்த தொடர்பும் இருக்காது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சிவப்பு கிரகமாகிய செவ்வாய்க்கும் பூமிக்கும் இடையில் சூரியன் வரவிருப்பதால் ஜூன் மாதம் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை பூமியுடனான மங்கள்யானின் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படும் என்று மங்கள்யானின் திட்ட இயக்குனர் சுப்பையா அருணன் கூறியுள்ளார். மேலும், மங்கள்யான் முழுமையாக தன்னாட்சி முறையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதே போன்று 2016ம் ஆண்டு மே மாதம், செவ்வாய்க்கும், சூரியனுக்கும் இடையில் பூமி வரவிருப்பதால் அப்பொழுதும் பூமியுடனான மங்கள்யானின் தொடர்பு துண்டிக்கப்படலாம் என்றும் சுப்பையா அருணன் குறிப்பிட்டுள்ளார்.